Friday, July 28, 2017

மாற்றங்களும் முன்னேற்றமும்



1991-ல் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மேள தாளத்தோடு தொடங்கப் பெற்றன. அவை வீரியமிக்க ஒரு புதிய இந்தியாவை உருவாக்கும் மாபெரும் மாற்றம் என்று ஊடகங்களில் பாராட்டப்பெற்றன. 25 ஆண்டுகட்குப் பின் அச்சீர்திருத்தங்களின் பலன்களைப் பார்த்தால் ஒரு விழுக்காட்டினரே பயன்பெற்றனர் என்றும் பெரும்பாலோர் மிகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டனர் என்றும் பல பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

சீர்திருத்தங்கள் கொணரப்பட்ட அதே சமயத்தில் உலகவங்கியின் உதவியோடு அனைவர்க்கும் கல்வி-2000 என்ற திட்டமும் நடைமுறைக்கு வந்தது. அதன்படி உலகில் உள்ள அனைத்துக் குழந்தைகளும் கி.பி. 2000-ஆம் ஆண்டிற்குள் தொடக்கக் கல்வி பெற இலக்கு வைக்கப்பட்டது. நமது அரசியல் சட்டம் 14 வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய, இலவசக் கல்வி என்ற இலக்கை வைத்துள்ள பொழுது நீர்த்த உலகவங்கித் திட்டத்தைச் செயல்படுத்த முன்வந்தது மறைமுக கல்வி மறுப்புத் திட்டமே. 12-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்து வந்த தமிழக அரசும் உலக வங்கியின் திட்டத்தைச் செயல்படுத்த சட்டம் இயற்றியது. ஐந்தாம் வகுப்பு முடிய அல்லது 14 வயது வரை, எது பிந்தியதோ அது வரை இலவசக் கட்டாயக் கல்வி என்று சட்டம் கூறியது. அதாவது ஒரு மாணவன் 14 வயது வரை தொடக்கக்கல்வி நிலையிலேயே தொடரலாம் என்று பொருள்படும் நகைப்பிற்குரிய சட்டம் அது. இதற்கு மாறாக 12-ஆம் வகுப்பு வரையில் உள்ள இலவசக் கல்வியை 12-ஆம் வகுப்பு வரை அல்லது குறைந்தது 10-ஆம் வகுப்புவரை கட்டாயமாக்கியிருந்தால் ஒரு மாபெரும் புரட்சிகரமான செயலாகப் போற்றப்பட்டிருக்கும்.

1948-ல் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. அது முதல் ஒவ்வொரு ஐந்தாண்டும் பாடத்திட்டங்கள் புதுப்பிக்கப்பட்டன. பாடநூல் வெளியீட்டாளர் களுக்கே இவற்றால் பயன். வெறும் வெட்டும் ஒட்டுமாகவே அமையும். மாற்றத்திற்கான காரணங்கள் இருக்காது. ஆங்கிலப் பாடத்திட்டம் மட்டும் புதுமை கொழிக்கும். அதனைப் புரிந்து கொள்வது ஆசிரியர்களுக்குக் கடினம். சோவியத் ஒன்றியம் ஸ்புட்னிக் ஏவியது அமெரிக்கக் கல்வியில் மாபெரும் மாற்றத்தைக் கொணர்ந்தது. ஆசிரியர் இயக்கமொன்று அது போன்று பாடத்திட்டங்கள் அர்த்தமுள்ளவாறு புதுப்பிக்க வேண்டுமென்று அறிக்கைவிட்டது. அன்றையக் கல்வி அமைச்சர் அதனைச் சவாலாக ஏற்று புதிய பாடத்திட்டங்கள் வகுக்கக் குழுக்கள் அமைத்தார். அவற்றில் ஆசிரிய இயக்கங்களைத் தங்கள் பிரதிநிதிகளை நியமிக்கக் கேட்டுக் கொண்டார். அதுவே இயக்கங்களின் அதிகாரபூர்வ பிரதிநிதிகள் உறுப்பினர்களாகச் செயல்பட்ட முதலும் கடைசியுமான பாடத்திட்டக் குழுக்கள். பாடத்திட்டங்கள் வெகுவாக மாற்றப்பட்டன. இயக்கங்களின் வேண்டுகோளை ஏற்று நாவலர் மூன்று லட்சம் ஆசிரியர்களுக்கும் 21 நாட்கள் புத்தறிவு முகாம்கள் நடத்த நிதி ஒதுக்கீடு செய்தார்.. இயக்கங்களின் ஆதரவோடு நடைபெறும் மாற்றங்கள் சீர்திருத்தங்களாக அமையும் என்பதற்கு 1971 பாடத்திட்டச் சீரமைப்பு உதாரணமாகும்.


அதற்கு அடுத்த பெரிய அளவு மாற்றம் மேநிலைக் கல்வித் திட்டத்தை செயல்படுத்தியதே. 1948 கலைத்திட்டம் தேசியக் கல்வி என்ற உன்னத லட்சியத்தைக் கொண்டதென்றால், உயர்கல்வியும் பாமரனுக்குக் கிடைக்க வேண்டுமென்ற நோக்கோடு மேனிலைக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டது. தெளிவான குறிக்கோள்களுடன் இவ்விரு மாற்றங்கள் மட்டுமே அமைந்தன. மற்ற மாற்றங்கள் மாற்ற வேண்டுமே என்பதற்காகவே செய்யப்பட்டன. கல்விக் கொள்கை ஏதுமின்றி செய்யப்படும் மாற்றங்களினால் பயன் குறைவே. மாற்றங்களைச் செயல்படுத்துவோர்க்குத் தெளிவு கொடுப்பது கொள்கையே.

மேநிலை கணிதப் பாடத்திட்டக் குழுத் தலைவராக அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஜி.சங்கரநாராயணன்நியமிக்கப் பட்டார். மதுரைகாமராஜர் பல்கலைக் கழகக் கணிதத் துறைத் தலைவர் முனைவர் எம்.வெங்கட்ராமன் ஒரு உறுப்பினர். முதல் கூட்டத்திலேயே அவர்கள் இருவரும் பள்ளிக் கல்வியோடு சம்பந்தப்பட்டவரே பாடத்திட்டக் குழுத் தலைவராக இருக்க வேண்டுமென்று வாதிட்டு என்னைத் தலைவராக்கினார்கள். பிற பாடக்குழுத் தலைவர்கள் அனைவரும் கல்லூரிப் பேராசிரியர்கள். என்.சி.ஈ.ஆர்.டி.யோடு நெருங்கிய தொடர்பு கொண்ட பேரா. வெங்கட்ராமன் கணிதப் பாடத்திட்ட நோக்கங்களைத் தெளிவுபடுத்தினார். பல்வேறு பாடத்தொகுப்புகளிலும் கணிதம் ஒரு பாடமாக இருக்கின்றது. உயர்கல்வியில் கணிதத்தைத் தேர்ந்தெடுக்கக்கூடியவர்கள்

மிகக் குறைவானவரே. பொறியியல், வணிகவியல், வானியல், வெப்பதட்பவியல், பொருளியல், நிர்வாகவியல் போன்ற பல துறைகளிலும் கணிதம் தேவைப்படுகின்றது. நீண்ட நிரூபணங்களைக் கொண்ட தேற்றங்களைவிட அத்தேற்றங்களில் உள்ள கணிதக் கோட்பாடுகளைப் பல துறைகளிலும் பயன்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக உருவாக்குவதே மேநிலைக் கல்வி கணிதப் பாடத்திட்டத்தின் நோக்காக அவர் முன்வைத்தார். அதன்படி உருவாக்கப்பட்ட பாடத்திட்டத்தில் கடைசி பாடப்பகுதியாக கணித உருமாற்றல் (Mathematical Modelling) வைக்கப்பட்டது.. கணித ஆசிரியர்களுக்குப் பல துறைகளைப் பற்றியும் அறிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆசிரியர்களுக்கான புத்தறிவுப் பயிற்சி எடுத்தவர்கள் இயற்பியலுக்கு அப்பால் கணிதப் பயன்பாடுகளை அறிந்தவரல்லர். எனவே அப்பகுதி 11-ஆம் வகுப்பிற்குத் தள்ளப்பட்டு அடுத்த திருத்தத்தின் பொழுது முற்றிலும் கைவிடப்பட்டது ஒரு சோக நிகழ்வெனலாம். மாற்றங்கள் கொணரும்பொழுது அவற்றைச் செயல்படுத்துபவரையும் முன்கூட்டியே ஆயத்தப்படுத்த வேண்டும் என்பது ஒரு பாலபாடம். இன்று இந்நிலையினின்று மாறி இளங்கலைப் பட்டப்படிப்பிற்குத் தயாரிக்கும் வகையில் பாடத்திட்டம் மாறிவிட்டது மேநிலைக் கல்வியின் நோக்கங்களுக்குப் புறம்பாகும். கோத்தாரி கல்விக் குழு, தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு ஆகியவற்றை அறியாது மாற்றங்கள் செய்யப்படுவதின் விளைவே இவை எனலாம்.

அமைச்சர்கள், இயக்குநர்கள் மாறும்போது மாற்றங்கள் கொண்டு வருவது ஒரு வாடிக்கை. என்.சி.ஈ.ஆர்.டி.யின் ஆதரவோடும், நடுவணரசு உதவியோடும் முழுமையான அகமதிப்பீட்டுத் திட்டம் பெரும் ஆரவாரத்தோடு செயல்படுத்தப்பட்டு இயக்குநர் மாறியவுடன் கைவிடப்பட்டது. அதே போன்றதுதான் கட்டாய உடற்கல்வி மதிப்பீட்டுத் திட்டம். பிரசவத்திலேயே மரித்தது. நான்கு நிலைகளில் அமைக்கப்பெற்ற ஆசிரியர் குறை தீர்ப்பு மையங்கள் அமைச்சர் மாறியதும் செயலிழந்துவிட்டன. ஆசிரியர் இயக்கங்களும் கண்டுகொள்ளவில்லை. பொதுப்பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பெருக்க உதவிய பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் வரலாற்றுச் செய்திகளாகிவிட்டன. மேலிருந்து செயல்படுத்தப்படும் புதுமைகள் அவற்றை அறிமுகப்படுத்தியவர் பணி மாறியவுடன் கைவிடப்படும் என்று ஒரு ஆய்வில் தெரிய வந்தது.

அண்மையில் புதிய கல்வி அமைச்சர், புதிய கல்விச் செயலர் பொறுப்பேற்றதும் சில அறிவிப்புகளை வெளியிட்டனர். பொதுத் தேர்வுகளில் தர வரிசைப் பட்டியல் வெளியிடுவதில்லை என்ற அறிவிப்பு பொதுவாக நல்வரவேற்பைப் பெற்றது. 2018 ஆம் ஆண்டு பொதுத் தேர்வுப் பட்டியல் பள்ளியாண்டு தொடங்கும் முன்னரே வெளியிடப்பட்டுள்ளது தேர்வையே முன்னிறுத்தக்கூடியதாக இருக்கின்றது. தேர்வினின்று விடுதலை கிடைப்பதற்கு மாறாக பள்ளி திறந்த நாள் முதல் பொதுத் தேர்வை நோக்கியே வகுப்பறைக் கற்பித்தல் அமையும். பொதுத் தேர்வு இல்லாத வகுப்புகள் வழக்கம்போல் கவனத்திற்கு வரவில்லை. சீர்திருத்தம் அங்கே தானே தொடங்க வேண்டும்? ஜூன் 16-ஆம் நாள் 41 அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.

மாற்றம் மாற்றத்திற்காக என்றிருக்கக்கூடாது. முன்னேற்றத்தை நோக்கிச் செல்ல உதவ வேண்டும். பிரச்சினைகளுக்குத் தீர்வுகளாக மாற்றங்கள் அமைய வேண்டும். ஒரு தனி நபரது விருப்பு வெறுப்புகளுக்கு இடம் இருக்கக்கூடாது. கல்வி அமைப்பில் மாணவர், ஆசிரியர், நிர்வாகி அல்லது அதிகாரி ஆகியோர் மனித உள்ளீடுகளாவர். உட்கட்டமைப்பு வசதி, நிதி ஆதாரம் ஆகியவை பிற உள்ளீடுகள். நல்ல குடிமகன், நல்ல சமூகம் ஆகியவை வெளியீடுகள். கற்பித்தல்-கற்றல் இவ்வெளியீடுகள் உருவாக உதவும் சாதனங்கள். உள்ளீடுகள் ஒன்று போல் அல்லாதவை. பல வகை மாணவர், பலவகை ஆசிரியர், சிறந்த அல்லது சாதாரணமான உட்கட்டமைப்பு வசதிகள் என்றாலும் வெளியீடு ஒன்று போன்றது. எடுத்துக்காட்டாக படித்த நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த மாணவர்க்கும், முதல் தலைமுறை தாய்மொழி தமிழல்லாத மாணவர்க்கும் வேறுபாடுகள் அதிகம். பள்ளிச் செயல்முறைகளை உள்ளீடுகளைப் பொறுத்து அமைத்துக் கொள்ள வேண்டும். இது ஒன்றே ஒரே வழி எனக் கிடையாது. ஒவ்வொரு வகுப்பும் மாறுபட்டது. அதனை அறிந்தவர் ஆசிரியரே. ஆசிரியர்தான் தனது வகுப்பறையை நிர்ணயிக்கக்கூடியவர். நாடு முழுமைக்கும் ஒரே முறை என்பது யதார்தத்திற்கு முரண்பட்டது. வகுப்பறைச் சுதந்திரத்தை ஆசிரியர்க்களிக்காது கொண்டுவரும் மாற்றங்கள் வெற்றியைத் தரா.
 (044-2360551 / rajagopalan31@gmail.com)


தொடரும் மதவெறிக்கு எதிராக சிந்த வேண்டியது இரத்தமல்ல, பகைமை உணர்ச்சி

ஜூன் 28 அன்று புது தில்லியின் ஜந்தர் மந்தரில் சிறுபான்மை இஸ்லாமியருக்கு எதிராகத் தொடரும் மதவெறி தாக்குதலுக்கு எதிராக நூற்றுக்கணக்கில் திரண்டிருந்தோரிடையே 22 வயது முகம்மது அசாருதீன் மேலே கண்ட வாசகங்களைப் படிக்கையில் உணர்ச்சி மேலிட கண்ணீர் சிந்தாதோர் ஒருவரும் இருக்கவில்லை என்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி. 17 வயதே நிரம்பிய தனது தம்பியைத் தங்கள் கண்ணெதிரே ஒரு வெறிக்கும்பல் அடித்துக் கொன்றதைப் பார்க்க நேர்ந்த ஓர் அண்ணனின் வாசிப்பு அது. அவரும் கடுமையாகத் தாக்குண்டிருந்தார். பண்டிகை நாளுக்காகத் துணிமணிகள் வாங்கிவர ஜூன் 22 அன்று அரியானாவில் இருக்கும் தங்களது சிற்றூரில் இருந்து தில்லி சென்று திரும்பிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள். ஏதோ காரணத்தை வைத்து இவர்களோடு வம்பு வளர்த்துச் சண்டை இழுத்து மதரீதியான அவதூறுகளைப் பொழிந்து அடிதடியைத் தொடங்கிய மதவெறியர்கள் நடத்திய தாக்குதலில் குரூரமான முறையில் கொல்லப்பட்டு விழுந்தவர் ஜுனைத். இனி, அத்தகைய வெறியர்களால் துரத்தப்பட முடியாத சொர்க்கத்தில் போய்ச் சேர்ந்துவிட்டதாக ஜுனைத் சொல்வது போன்ற இந்த வாசகங்களைத் தமது பத்திரிகையாள நண்பர் எழுதிக் கொடுத்திருக்க, இதைத்தான் அசாருதீன் கண்டனக் கூட்டத்தில் படித்தார்.

என் பெயரின் நிமித்தம் வேண்டாமே... (NOT IN MY NAME) என்று தலைநகரில் எழுந்த இந்த எதிர்ப்புக்குரல் தில்லியில் மட்டுமல்ல, மும்பை, பெங்களூரு, மும்பை, லக்னோ, ஹைதராபாத் போன்ற பல முக்கிய மாநகரங்களிலும் திரைநட்சத்திரங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்க எழுச்சிகரமாக நடந்துள்ளது. ஆட்சியாளர்களே, உறுதியான தலையீட்டைச் செய்து மதவெறி தாக்குதல்களுக்கு முடிவு கட்டுங்கள் என்ற தீர்மானமான குரல் அது. உங்களது நீடித்த மௌனத்தை உடைத்து உண்மையைப் பேசுங்கள், இஸ்லாமியருக்கு எதிரான இந்த வெறித்தன மனநிலையை மேலும் வளர்த்தெடுக்காதீர்கள், சிந்த வேண்டியது பகைமை உணர்ச்சியைத் தானே தவிர இரத்தத்தை அல்ல போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளை உயர்த்திப் பிடித்த இந்தப் போராட்டத்தில், ஷப்னா ஆஸ்மி, கொன்கோனா சென், ரஜத் கபூர் போன்ற பல திரைக் கலைஞர்களும், அர்பிதா சாட்டர்ஜி போன்ற சமூக ஆர்வலர்களும், ராமச்சந்திர குஹா போன்ற ஆய்வாளர்களும், கலைஞராக மட்டுமின்றி தீரமிக்க செயல்பாட்டாளராகவும் விளங்கும் கிரீஷ் கர்னாட் போன்றோரும் மட்டுமல்ல, ஏராளமான சாதாரண மக்களும் எழுச்சியோடு இந்த முழக்கங்களில் இணைந்தனர்.


ஜுனைத் மரித்ததற்குமுன், ராஜஸ்தானில் ஆள்வார் பகுதியில் பால் வியாபாரம் செய்துவந்த ஃபெலுகான் தமது மகன்கள் கண்ணெதிரேஅடித்துக் கொல்லப்பட்டார். எருமை வாங்கப்போன இடத்தில் இந்தப் பசு 12 லிட்டர் கறக்கும் என்று ஒரு வியாபாரி கறந்து காட்டியதைப் பார்த்து ஆர்வத்தோடு அதை வாங்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றி வந்த பாவத்திற்காகத் தம்முயிரை இழந்தார் அவர். பசுப் பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் திரியும் காவிப்படை காலிகள் வண்டியை வழியில் நிறுத்தி, பசுவைக் கொல்வதற்காக இழுத்துச் செல்வதாகக் குற்றம் சாட்டி உருட்டுக் கட்டைகளைக் கொண்டு அவரை அடித்தே கொன்றுவிட்டனர். அதுமட்டுமின்றி கொல்லப்பட்டவரின் மகன் இர்ஷாத் உட்பட மற்றவர்கள் மீது கொல்வதற்காக மாட்டுக் கடத்தல் செய்ததாகப் புகாரைப் பதிவும் செய்தனர்.

பெண்கள் இயற்கை உபாதைக்கு அமருமிடத்தில் புகைப்படம் எடுத்தவர் களைத் தடுத்ததற்காக ராஜஸ்தானில் ஓர் இஸ்லாமியர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அதன் மீதான அதிகபட்ச கருத்தாக, மாநில முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா சொல்ல முடிந்தது இதுதான்: பிரதாப்கர் பகுதியில் திரு ஜாஃபர்கான் என்பவர் இறந்தது துரதிருஷ்டவசமானது. நியாயம் நிச்சயம் பிறக்கும். அண்மைக் காலத்தில், சிறுபான்மையினரையோ, தலித் வகுப்பினரையோ எந்தக் காரணத்தைச் சொல்லியும் அல்லது எதையும் சொல்லாமலும் கூட கும்பலாகச் சென்று தாக்கிக் கொல்லும் கொடுமைகள் நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வருகின்றன. உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்ததற்குப்பின் மாட்டுக்கறி விற்பதான புகாரில் எந்த ஒட்டலையும் அடித்து நொறுக்கலாம். அதன் உரிமையாளரைத் தாக்கலாம், வழக்கொன்றும் பதிவாகாது என்ற துணிவு வந்திருக்கிறது. வட மாநிலங்கள் பலவற்றிலும் சங் பரிவாரத்தின் வேட்டை, வெறித்தன தாக்குதல், கொலைவெறிச் செயல்கள் நடைபெறுவது ஏதோ இயல்பான வாழ்க்கையின் பகுதிபோல கடந்து செல்லும் உளவியலை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர் மதவெறியர்களும், அவர்களுக்கான அரசுகளும்.

இதே நாட்டின் குடிமக்களான சிறுபான்மையினர் தங்களது மத அடையாளத்தையோ, பெயரையோ இனி உயிருக்கான அச்ச உணர்வின்றி வெளிப்படுத்த இயலாது என்பது போன்ற நிலை வேகமாக உருவாகிக் கொண்டிருப்பதை, ஒரு மதச்சார்பற்ற தேசம் எப்படி அனுமதிக்க முடியும்? அநியாயமாகக் கொல்லப்பட்டவர்களது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வேண்டிய
ஆட்சியாளர்கள், பண்பாட்டுக் காவலர் என்ற போர்வையில் கொலைவெறியோடு அலையும் குற்றவாளிகளைச் சந்தித்து உச்சிமோந்து அங்கீகாரம் அளிக்கும் அராஜகத்தை எப்படி சகிப்பது ?

குஜராத் தொடங்கி நாட்டின் பல பகுதிகளில் தலித் மக்கள் வேட்டையாடப்பட்டதை நினைவில் இருந்து துடைத்தெறியச் சொல்லிவிட்டு, ராம் நாத் கோவிந்த் என்ற பழுத்த ஆர்.எஸ்.எஸ்காரரை தலித் என்ற அடையாளத்தோடு குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராகக் களமிறக்கும் அராஜகத் துணிவு ஆட்சியாளருக்கு வாய்த்துள்ளது.

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே வரிக்கொள்கை, ஒரே மதம், ஒரே பண்பாடு என்ற ஒற்றைத் தன்மையில் தங்களது போர்முனையை வகுத்திருக்கும் சங் பரிவாரத்தின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு முகம் அபாயகரமானது என்பதை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஆனாலும், நம்பிக்கைகள் வற்றிப்போன காலமல்ல இது. குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் மீரா குமார் நிறுத்தப்பட்டிருக்கிறார். வகுப்புவாதத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தின் குறியீடு இது என்று வருணித்துள்ளார் மார்க்சிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி.


பள்ளிகளில் கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிரான போர்க்குரல் பரவலாக ஒலிக்கத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் தொன்மை நாகரிக வளர்ச்சி குறித்து சிவகங்கைக்கு
அருகே கீழடியில் தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்திருக்கும் வலுவான சான்றாதாரங்களில் வெளிப்பட்ட மதச்சார்பின்மை அடையாளத்தைக் கண்டு அதிர்ந்து, அந்த அகழ்வாராய்ச்சியைக் குழி தோண்டிப் புதைக்கத் துடிக்கும் மோடி அரசின் முயற்சிகளுக்கு எதிராகப் பரந்துபட்ட சாதாரண மக்களிடையே கேள்வி வெடிக்கிறது. இந்த இரண்டு பிரச்சினைகள் மீதான சிறப்பு மாநாடு ஒன்றினை ஜூன் 26 அன்று, சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், இந்திய மாணவர் சங்கமும் இணைந்து நடத்தியது மகத்தான வெற்றி பெற்றது.

ஜூன் 28 அன்று நாட்டின் பல பகுதிகளிலும் திரண்ட மக்கள் திரள், அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்று முழக்கம் எழுப்பியுள்ளது. வாழ்வுரிமை எங்களது அடிப்படை உரிமை, வாழ்வுரிமையைப் போலவே, இப்படி பொதுவெளியில் எதிர்ப்புக்குரல் எழுப்ப வந்து நிற்பதும் எனது அடிப்படை உரிமை என்ற குரலை, பெங்களூரு கூட்டத்தில் முழங்கி இருப்பவர், எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர். கடுமையான சவால்கள், அராஜகமான தாக்குதல்கள், கொடூரமான ஒடுக்குமுறைகள் எப்போதும் எதிர்ப்பின்றிப் போய்விடுவதில்லை. பொய்மைகளின் வெற்றி நிரந்தரமானதுமில்லை.
9445259691

SV.VENU@GMAIL.COM