Wednesday, December 7, 2016

கரும்பலகை என்ன வர்ணம் – மு.ராஜபிரபு



கரும்பலகை என்பது ஒரு வகுப்பறையின் முதுகெலும்பு மட்டுமல்ல, அது ஆணிவேர், ஆதாரம். ஒரே ஒரு கரும்பலகை மட்டும் இருந்தால் அந்த இடம் வகுப்பறையாகிவிடும் என்பார்கள். பள்ளியின் ஆதாரம் கரும்பலகை என்பதை உணர்ந்தே 1986ல் புதிய தேசிய கல்விக்கொள்கையில்கூட அடிப்படை வசதி களை மேம்படுத்தும் திட்டத்திற்கு கரும்பலகைத் திட்டம் எனப் பெயரிட்டார்கள். ஆரம்பகாலத்தில் போதிய அறைகள் இல்லாத அரசுப்  பள்ளி களில் ரூசோசொன்னதைப் போல மரங்களுக்கு நடுவில் மூன்று கால்களுடன் கரும்பலகை பயன்படுத்தப்பட்டது. பலகையில் கருப்பு வர்ணம் பூசியதால் அதற்குக் கரும்பலகை என பெயரிட்டார்கள்.

பின்னர் சுவரில் வர்ணம் பூசியும், பின்னர் இரண்டு உருளைகளுக்கு இடைப்பட்ட கருப்புத் துணியும் பயன்படுத்தப்பட்டன. அந்த சுவரில் கருமை வர்ணம் பூசுவது ஒரு கலை. பள்ளி மாணவத் தலைவனுக்கு இந்த வித்தை கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். நன்றாக வெந்து முடித்த கரித்துண்டை எடுத்துக் கொண்டு அதனுடன் ஊமத்தங்காயும் அதன் இலையும் சேர்த்து, தண்ணீர் சிறிதளவு விட்டு அரைத்து எடுத்தால் கிடைக்கும் கரும்பலகையின் வர்ணம்.

1990க்கு பின்னர் பதின்மபள்ளிகள்  தங்களை தனித்துவமாகக் காட்டிக் கொள்ள எடுத்துக் கொண்ட ஆயுதமாக கரும்பலகையின் நிறத்தை மாற்றி அமைத்தன. வெள்ளை நிறப் பலகையில் கருப்பு (அ) சிவப்பு நிறத்தில் எழுதியும், பச்சை நிறப் பலகையில் வெள்ளை நிறத்தில் எழுதியும், இப்போது ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் மின்னணுப் பலகையும்  பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல புதிய தொழில்நுட்பங்கள் பதின்ம பள்ளியில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இன்றும் எங்கோ ஒரு கிராமத்து பள்ளியில் மூன்று சிறுவர்கள் கரிக்கட்டையை அரைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, இந்த கரி யாருக்கு என்பதுதான் இப்போதைய கேள்வி.

(தொடர்புக்கு : 9159797071)

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.