மாலை ஐந்து மணிக்கு இன்னும் பத்து நிமிடங்கள்தான் இருந்தது. சொல்லி
வைத்தாற்போல் ஒவ்வொருவராக மேடம் குல்கர்னி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். பருமனான
உடல் வாகு. வயதிற்கு மீறிய தளர்ச்சி. வழக்கமான முதுமைக்கால மருத்துவப் பிரச்சினைகள். சராசரி நடுத்தரவர்கத்தின்
ஒட்டுமொத்த பிரதிநிதியைப் போல கணவர் வினோத்தின் ரிட்டயர்மெண்ட் பணத்தை எதிர்பார்த்து, ஏராளமான கனவுகளுடன் நாட்களை நகர்த்திக்கொண்டிருப்பவர்தான்
நம் மேடம் குல்கர்னி.
முதலில் வந்தவரின் பெயர் ராமானுஜம். வயது ஐம்பதிற்கு மேல். ஒரு தனியார் கம்பெனியில்
தலைமைக் கணக்கராக இருக்கிறார். ஓரளவிற்கு வசதியானவர். இருக்கும் சேமிப்பை வைத்து
கொஞ்சம் கடனும் வாங்கி ஒரு சிறிய வீட்டை கட்டிக்கொண்டார். மற்றவர்களைப் போல மாதம் பிறந்தால்
வாடகைக்கு என ஒரு தொகையை அவர் எடுத்து வைக்க வேண்டியதில்லை. வரவேற்பறையில் வினோத் குல்கர்னிக்காக காத்திருக்கும்
ராமானுஜம், கழுத்துப் பக்கம் அடிக்கடி தெரிந்த பூணூலை லேசாகத் தளர்த்தி சட்டைக் காலரின் கீழ்
தள்ளிவிட்டுக்கொண்டே அன்றைய செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தார்.
அடுத்து வந்தவர் அரவிந்த் சேகல். ஒடிசலான உருவம். பார்ப்பதற்கு மிகவும் வெகுளியாகத் தெரிந்தாலும்
பண விஷயத்தில் மிகவும் கறாரான பேர்வழி. “என்ன விலைவாசி! வேர்க்கடலையை வறுத்தா ஒரு விலை, வறுக்காட்டி ஒரு விலை சொல்றான்” என்று புலம்பிக்கொண்டே ராமானுஜம் அருகில் வந்தமர்ந்தார்.
பிளாக் டீயுடன் அங்கு வந்த மேடம் குல்கர்னி எல்லாரும் வந்திட்டீங்களா
என்று கேட்டுக்கொண்டே டிரேயில் இருந்து ஒவ்வொரு கோப்பையாக எடுத்து டீப்பாயில் வைத்தார்.
அவருடனேயே வந்த வினோத் வறுத்த நிலக்கடலையை சரிசமமாக இரண்டு பிளாஸ்டிக் தட்டங்களில் வைத்தார். ராமானுஜம் நிலக்கடலையை
சிறிது எடுத்துத் தன் உள்ளங்கைகளில் தேய்த்து ஊதி வாயில் போட்டுக்கொண்டார்.
அப்போது அங்கு வந்த அனுப் பானர்ஜி நாந்தான் இன்னைக்கும் லேட்டா என்று கேட்டுக்கொண்டே மேடம் குல்கர்னியைப் பார்த்துச் சிரித்தார். அப்போதுதான் ராமானுஜமும், அரவிந்த் சேகலும் வழக்கத்திற்கு மாறாக மேடம் குல்கர்னி
நெற்றியில் இருக்கும் பெரிய அளவு பிந்தியையும், தங்க வளையலுக்குப் பதிலாக கைகள் நிறைய கண்ணாடி வளையல்களையும் எதேச்சையாக கவனித்தார்கள்.
அனுப் பானர்ஜி தலையில் அணிந்திருக்கும்
காந்திக் குல்லாயை மிகுந்த அக்கறையுடன் இரண்டாக மடித்துத் தன் தொடையில் வைத்து கை
நிறைய நிலக்கடலையை எடுத்துக்கொண்டார். என்ன விலைவாசி, ஒரு நாள் போவதே பெரும்பாடா இருக்கு என்று குறைப்பட்டுக்கொண்டே பிளாக் டீயை
சத்தம் போட்டு உறிஞ்சிக் குடித்தார்.
அடுக்களையில் தனி ஆளாகப் போராடிக்கொண்டிருந்த மேடம் குல்கர்னி கணவரை அழைத்து “வினோத், ரெண்டு தெரு தாண்டி இருக்கும் பிலால்ஜி கடையிலே லூசிலே
ரெண்டு கிலோ பச்சரிசி வாங்கிட்டு வாங்க. அப்படியே ஒரு கப் தயிரும், அவலும் வாங்க மறந்திடாதீங்க” என்று அவரின் ஒப்புதலிற்குத் துளியும் காத்திருக்காமல் துணிப் பையை கணவரின் கைகளில் திணித்தார். “வினோத் ஒண்ணு சொல்ல மறந்திட்டேன். சோம்பேறித்தனப்பட்டு
பக்கத்திலே இருக்கும் டிபார்ட்மெண்ட் ஸ்டோரிலே வாங்கிட்டு வந்தீங்களோ...” கண்களை அகல விரித்து உருட்டி வினோத்தை ஒரு நொடி நிலைகுலைய வைத்தாள் மேடம் குல்கர்னி.
வினோத் கேட்டைத் திறந்து வேளியே போகும் சமயம் ஒரு இளவயது சாமியார் கழுத்தில் ஏராளமான ருத்ராட்ச மாலைகளுடனும் நெற்றியில் தேவையான பரப்பளவிற்கு
அதிகமாக விபூதியை பூசிக்கொண்டு நின்றிருந்தார். அவர் கையில் மண் பாத்திரத்துடன் நிற்பதைப்
பார்த்த வினோத் குல்கர்னி தன் பைஜாமாவில் இல்லாத சில்லரைகளைத் துளாவினார். வெகு அலட்சியமாக வினோத்தைக் கடந்து அந்த சாமியார் உரிமையுடன் உள்ளே சென்று
மேடம் குல்கர்னியை சைகையால் அழைத்தார். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு “தொடர்ந்து மூன்று சனிக்கிழமை இந்த
நெல்லிக்கனியை வெற்றிலையில் வைத்து மடித்து உங்கள் குல தெய்வத்தை வழிபடுங்கள்” என்று கூறி மேடம் குல்கர்னியின் கைகளில் ஒரு குறிப்பிட்ட விசையுடன் ஒவ்வொன்றாக மூன்று நெல்லிக் கனிகளை
போட்டார். தடுமாறியபடி மூன்று நெல்லிக்கனிகளையும் கீழே விழாமல் மிகுந்த பயபக்தியுடன் கேட்ச் பிடித்த மேடம் குல்கர்னி அவரை வணங்கி அரவிந்த்
சேகலை செய்கையால் ஒரு நூறு ரூபாய் கொடுக்குமாறு அவசரப்படுத்தினாள். சேகலும் தன் பையிலிருந்து நூறு ரூபாயை அரை மனதுடன் நீட்டினார். அனைத்தையும் கவனித்த வினோத் வாய்விட்டு பலமாகச்
சிரிக்க மேடம் குல்கர்னி தன் ஓரப்பார்வையால் வினோத்தை சுலபமாக மீண்டும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தாள். அப்போது வீட்டிற்குள்
ஒரு ஆடு ஓடி வந்ததைப் பார்த்த ராமானுஜம் சப்தம் போட்டு அலறினார். ஆட்டுப்பாலிலே டீ போட்டு குடிச்சிருக்கீங்களா ராமானுஜம் என்று
மேடம் குல்கர்னி கேட்க அவர் அருவருப்புடன் உதட்டைப் பிதுக்கினார். “பாலோட விலை போற போக்கைப் பாத்தா இனிமே ஒவ்வொருத்தர் வீட்டிலேயும் ஒரு ஆடு வளக்கவேண்டி வரும் ராமானுஜம். எதுக்கும் வினோத்திடம் இப்பவே
கொஞ்சம் டிரெய்னிங்க் எடுத்துக்கோங்க” என்று மேடம் குல்கர்னி கண் சிமிட்டிச் சிரிக்க ஒரு கையில் பையுடனும், மறு கையில் தொன்னையுடனும் வீட்டிற்குள் நுழைந்தார்
வினோத்.புளியோதரையின் மணம் அனைவரின் நாசியையும் துளைத்தது. கடைக்குப் பக்கத்திலே இருக்கும் கோயில்லே கொடுத்தாங்க. அதான் கொஞ்சம்
லேட்டாயிடுச்சு என்று சாட்சிக்கூண்டில் நின்று கொண்டு குறுக்கு விசாரணையின்போது பிராசிக்கியூட்டரிடம் தயக்கத்துடன் பொய் சாட்சி சொல்லும் நபரைப் போல
குல்கர்னி மேடத்தின் கண்களை நேரடியாகப் பார்க்காமல் ஒப்பித்தார். ராத்திரிக்கு சென்னா, பன்னீர், உருளை, தக்காளி போட்டு சப்ஜி வெச்சிடவா
என்று மேடம் குல்கர்னி தன் கணவரின் தோளில் சரிந்த ஹியரிங்க் எய்டை சற்று அழுத்தி அவரின் காதில் வைத்து மீண்டும்
கேட்க சூப்பர், அதையே வெச்சிடு என்று தனக்கு அபூர்வமாக அளிக்கப்பட்ட சுதந்திரத்தை அளவாக உபயோகித்தார்.
இதுவரை கதையை பொறுமையுடன் கூறிக்கொண்டிருந்த வேதாளம் கதையை இத்துடன் நிறுத்தி மூன்று கேள்விகளை மன்னன் விக்கிரமாதித்யனிடம் கேட்டது : “விக்கிரமா, இது வரை நீ கேட்ட கதையில் வந்த ஆறு பேருடைய பொதுப் பிரச்சினை என்னவாக இருக்கும்?”
சிறிதும் யோசிக்காமல் விக்ரமாதித்யன் கூறினான். வேறென்ன? இந்தியாவில் ஏறும் விலை வாசிதான்.
இதைக் கேட்ட வேதாளம் இந்தக் கதையில் கையாளப்பட்டிருக்கும் பொருட்களின் பொதுவான தன்மை என்ன என்று தன் அடுத்த கேள்வியைக் கேட்டு ஊரே அலறும்படி
சிரித்தது. சற்றே நிலை தடுமாறிய விக்ரமாதித்யன் உடனே தன்னை சுதாரித்துக்கொண்டு இந்தக் கதையில் வரும் அனைத்துப் பொருட்களுக்கும்
வரி உண்டு. என்று மெலிதாகச் சிரித்தான்.
விக்ரமனின் பதிலால் மிகவும் திருப்தி அடைந்த வேதாளம் தன் மூன்றாவது கேள்வியைக் கேட்டது : “அவன் மகுடம் தரித்த அரசனாக இருக்கவேண்டும். எனினும்யாசித்தே தன் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டிய
கையறு நிலையில் இருக்கவேண்டும். அந்த அரசனின் பெயர் என்ன?.“
இந்தக் கேள்விக்கு விக்ரமனால் சரியான பதிலைக் கூறமுடியாது என்று எண்ணிய வேதாளம் தன் பிடியை லேசாகத் தளர்த்தியது. ஓரு அரசன் என்ன, லட்சக்கணக்கான அரசர்களை என்னால் பட்டியலிடமுடியும் என்று விக்ரமன் கூற வேதாளம் திகைப்புடன்
விக்ரமனின் பதிலிற்காக ஆர்வத்துடன் காத்திருந்தது.
“ஜனநாயகம் என்ற மகுடத்தை தலையில் சுமந்துகொண்டு இன்றளவும்
காவிரி நீருக்கும், கிருஷ்ணா நீருக்கும் அண்டை மாநிலங்களிடம் கையேந்தும் கையறு நிலையில்தானே இன்றளவும் இருக்கிறார்கள் அப்பாவித் தமிழ் நாட்டு மக்கள், இல்லை மன்னர்கள்” என்று தன் மூன்றாவது கேள்விக்கும் சரியான பதிலை அளித்தான் விக்ரமன்.
“வீரம் மட்டும் உன் கூட பிறந்ததில்லை, விவேகமும்தான் என்று உன்னுடைய தெளிவான மற்றும் சாமர்த்தியமான விடையினால் நீ நிரூபித்து விட்டாய்
விக்ரமாதித்தா” என்று கூறிவிட்டு மௌனத்தைக் கலைத்த மன்னனின் தோளில்
இருந்து பறந்து மீண்டும் தான் குடியிருந்த முருங்கை மரத்திற்கே சென்று சேர்ந்தது வேதாளம்.
0 comments:
Post a Comment
உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.