Friday, September 15, 2017

பழைய மாணவர்களுடன் ஒரு உணர்ச்சிகரமான சந்திப்பு

1989-லிருந்து 1992 வரை விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் இயற்பியல் பி.எஸ்சி. படித்த மாணவர்கள் ஆகஸ்ட் 18 அன்று பழைய மாணவர்கள் சங்கத்தைத் தொடங்கினர். நிகழ்ச்சியன்று காலை 10 மணிக்கு ஓய்வு பெற்றவர்களும் தற்போது பணியில் இருப்பவர்களுமாக 12 விரிவுரையாளர்கள் கல்லூரிக்கு வந்து விட்டோம். எங்களுக்கு முன்னதாகவே 15 பழைய மாணவர்கள் அங்கே குழுமியிருந்தனர். 25 ஆண்டுகள் கழித்து அனைவரும் சந்தித்துக் கொண்டதில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.

அரைவட்டமாகப் போடப்பட்ட நாற்காலிகளில் ஆசிரியர்கள் ஒரு பக்கமும் மாணவர்கள் ஒரு பக்கமுமாக அமர்ந்த பிறகு நிகழ்ச்சி தொடங்கியது. ராஜேஷ் குமார் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அந்த வகுப்பில் படித்த 30 மாணவர்களில் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடிந்ததை அவர் தெரிவித்தார். பின் மாணவர்கள் ஒவ்வொருவராக அவர்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களைப் பற்றிய தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அதன் பின் ஆசிரியர்கள் உரையாற்றினர். பி.எஸ்சிக்குப் பிறகு மாணவர்கள் மேலும் படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தது குறித்தும் சுமார் 12 பேர் அயல்நாடுகளிலும் மற்றவர்கள் வெவ்வேறு ஊர்களிலும் நல்ல நிலையில் செட்டில் ஆனது குறித்தும் ஆசிரியர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பழைய மாணவர் சங்கத்தை கல்லூரி முதல்வர் வந்து தொடங்கி வைத்தார். மதிய உணவுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அன்றைய நாள் அற்புதமான நாளாக அமைந்தது.

கே.ராஜூ

0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.