Monday, September 5, 2016

புதிய கல்விக் கொள்கை 2016- கருத்தரங்கம்



கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் புதிய கல்விக் கொள்கை 2016 சவால்களை விளக்கி மாநில அளவிலான கருத்தரங்கம் 2016 ஜூலை 30 அன்று சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா. நா. மணி தலைமை தாங்கினார். நிதிக் காப்பாளர் ச.மோசஸ் வரவேற்புரை நிகழ்த்தினார். லயோலா கல்லூரியின் முதல்வர் ஆரோக்கியசாமி சேவியர் கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். கல்வியில் வகுப்புவாத சவால்கள் என்ற தலைப்பில் பேரா.அருணன் பேசுகையில், கல்விப் பரவலைத் தடுப்பது, ஆன்மிகக் கல்வி முறை கொண்டு வருவது, அவர்களுக்கு ஏற்றவாறு கல்வி முறையை மாற்றிக் கொள்ளுவது உள்ளிட்ட பெரும் ஆபத்துகள் புதியக் கல்விக் கொள்கையில் உள்ளன. கலாச்சார ஒருமைப்பாடு என்ற போர்வையில் பிற மொழிகளைத் திணிக்க முயல்கின்றனர் என்றார்.

பள்ளிக் கல்வி சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பில் பேரா. ஆர்.இராமானுஜம் பேசுகையில், கடந்த 25 ஆண்டுகாலமாகக் கடைப்பிடிக்கப்படும் உலகமயக் கொள்கை பொதுக்கல்வி முறையை அழித்து விட்டது. தற்போது கொணரப்பட இருக்கும் மத்திய அரசின் புதியக் கல்விக் கொள்கை மாணவர்களையும் ஆசிரியர்களையும் குற்றவாளிகளாக மாற்றுவது கண்டிக்கத்தக்கது என்றார்.

உயர்கல்வி சந்திக்கும் சவால்கள் என்ற தலைப்பில் பேரா. ஜேம்ஸ் வில்லியம் பேசியபோது, 12 ஆம் வகுப்பு முடித்துவரும் மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு வைத்து, அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் அவர்களுக்கு உயர்கல்வி வழங்குவது மக்களின் கல்விக் கொள்கை அல்ல, சாதாரண மக்களுக்கு எதிரான கல்விக் கொள்கை என்றார். கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பில் 23 அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேரா.மணி எழுதிய புதிய கல்விக் கொள்கை: ஆசிரியரும் மாணவரும் குற்றவாளிக்கூண்டிலா? என்ற புத்தகமும், விழுது இதழின் கருத்தரங்க சிறப்பிதழும் வெளியிடப்பட்டன. ஏசு சபையின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை ஸ்டீபன், அருட்தந்தை ஜான். கென்னடி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் வீ. மாரியப்பன் நன்றி கூறினார்.

இக் கருத்தரங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

மத்திய அரசு உருவாக்கியுள்ள `புதிய கல்விக் கொள்கை உருவாக்கத்திற்கான சில உள்ளீடுகள் என்ற ஆவணத்தை, தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட வேண்டும். அதன் மீது கருத்துக் கூறுவதற்காக மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும். புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையைத் தயாரிக்க அனைத்து மாநிலங்களிலும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் உள்ளிட்ட விளிம்புநிலை மக்களின் கருத்துக்களையும் பிரதிபலிக்கக் கூடியதாக புதியவரைவுக் குழு உருவாக்க வேண்டும். சமஸ்கிருதத் திணிப்பை ஏற்க முடியாது. ஆகஸ்டு 13,14 ஆகிய தேதிகளில் மாவட்டந்தோறும் கூட்டங்களை நடத்தி கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பை பரவலாக்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.




0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.