Friday, August 5, 2016

திரை விமர்சனம்


குடும்பத்தில் குழந்தை வளர்ப்பில் அப் பாவின் பங் களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது   என்பதனை அழகிய கலையாகச் சொல்கிற படம்தான் இயக்குநர் சமுத்திரக்கனியின் இந்த  அப்பா. படத்தில் மூன்றுவகையான அப்பாக்கள் காட்டப்படுகிறார்கள். ஒருவர், எப்படியும் தன் மகன் மாநிலத்திலேயே முதல் மார்க் வாங்கி, மருத்துவம் படித்து, உலகிலேயே உயர்ந்த இடமாகக் கருதப்படுகிற அமெரிக்காவில் வேலை பெற்று செட்டில் ஆக்கிவிட வேண்டும் என்று கண்டிப்போ கண்டிப்பாக மகனை வளர்க்கிற அப்பா. இன்னொருவர், நாம் இருக்கிற இடம் தெரியாமல் வாழ்ந்துவிட்டுப் போய்விடவேண்டும் என்ற கோழைத் தத்துவத்தின் அடிப்படையில் மகனை வளர்க்க முற்படும் அப்பா.

இந்த இருவருக்கும் நேர் மாறாக, குழந்தைகளை அவர்கள் இயல்பில் வளரவிட வேண்டும்.  படிப்பு, வேலை, குடும்பம் என்ற சுயநல வட்டத்திற்குள் சிக்காமல் சக மனிதர்களை மதிக்கிற பண்போடு வளர்க்கவேண்டும் என்பது போன்ற உயரிய கொள்கைகளோடு தன் மகனை  வளர்க்கிறவர் இன்னொரு அப்பா. ஆக, இந்த மூன்று அப்பாக்களின் விருப்ப முயற்சிகளில் அவர்களின் மூன்று மகன்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கையே படத்தின் கதை.

அதாவது, இந்த உலகம் ஆபத்தானது என்கிற மனநிலையைக் குழந்தைகளிடத்தில் விதைக்கிற மனநிலைக்கும் இந்த உலகம் அழகானது என்கிற சிந்தனையை விதைக்கிற மனநிலைக்கும் என்ன விதமான பலன்கள் குழந்தைகளிடையே உண்டாகும் என்பதை அழகாகச் சொல்கிறது படம்.

சிந்தனைத் தெளிவும், அறிவோடும் அறிவியல் பார்வையோடும், நமது அடுத்த தலைமுறைச் சிறார்களை அணுகவேண்டும் என்கிற உறுதிப்பாடும் கொண்ட அப்பா பாத்திரத்தில் வாழ்ந்து கரைந்திருக்கிறார் இந்தப் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சமுத்திரக்கனி. அவரிலும் இன்னமும் அழுத்தமான நடிப்பினை வழங்கி முத்திரை பதித்துள்ளார் சுயநலமும், அதற்காக மகனிடம் கொடூரமான கண்டிப்பும், சதா பதட்டமுமாக வலம் வரும் தம்பி ராமய்யா. மனிதர் படம் முழுக்க நடிப்பில் அசத்திவிட்டார்... சிற்சில இடங்களில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் போலத் தோன்றினாலும். மகனை மாநிலத்திலேயே முதல் மாணவனாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறச் செய்வதிலாகட்டும், பின்னர் கோழிப் பண்ணையைப் போல மாணவர்களை அடைத்துப் போட்டு அவர்களின் சிறகுகளை வெட்டிக் கொடுமைப்படுத்தும் மதிப்பெண் வெறியூட்டிப் பணம் பிடுங்கும் பள்ளியில் அவனைச் சேர்த்துவிட்டு அவருக்கு ஏற்படும் கசப்பான அனுபவங்களில் ஆகட்டும் தம்பி ராமய்யா கலக்கு கலக்கு என கலக்கிவிட்டார். மூன்று அப்பாக்களின் மகன்களாக வரும் சிறுவர்களான காக்கா முட்டை புகழ் விக்னேஷ், காப்ரியல் ராகவ், நசாத் மற்றும் ப்ரீத்தி, விநோதினி, நீலநந்தின் என படத்தின் எல்லாக் கதாபாத்திரங்களுமே தங்கள் பங்களிப்பினைச் சிறப்பாகச் செய்துள்ளனர். ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம். நாதன், இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா ஆகியோரும் படத்தின் நோக்கத்திற்குத் துணை செய்துள்ளனர்.

காட்சி ஊடகமான சினிமாவில் வெறும் அறிவுரை மழையாக வசனங்களை அள்ளித் தெளித்திருப்பது
போன்ற குறைகளையும் மீறி, இந்த அப்பா தமிழ் சினிமாவின் முற்றிலும் புதிய முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். இன்றைக்கு நமது கல்வியும், குடும்பங்களின் சூழலும் சுயநலம் மிக்க படிப்பாளிகளையே உற்பத்தி செய்கிற கொடுமைக்கு எதிராக, சமுதாய உணர்வும்இயல்பான மனிதநேயப் பண்புகளும் நிறைந்த மனிதர்களாக நமது குழந்தைகளை வளர்க்க வலியுறுத்தும் அரிய படைப்புதான் இந்த அப்பா. குழந்தைகளிடத்தில் தன்னம்பிக்கையை வளர்க்கச் சொல்லுகிற படமாக, ஒவ்வொரு குழந்தையிடமும் ஒளிந்திருக்கும் தனித்திறனைக் கண்டறிந்து அதில் அக்குழந்தையை ஊக்கப்படுத்த வேண்டும் என்று மிகச் சரியாக எடுத்துரைக்கும் படமாக, பாலியல் குறித்த குழப்பமும், அறியாமையும் துளிர்விடுகிற பதின்பருவத்தில் அவர்களுக்கு உற்ற தோழனாக பெற்றோர் இருந்து, இயல்பாக மனம்விட்டுப் பேசி அவர்களின் ஐயத்தைத் தீர்த்திட வேண்டும் என்று துணிச்சலோடு சொல்லும் படமாக, சாதி-மத பேதமற்ற, ஆண்-பெண் நட்பென்பது இயல்பானதுதான், அதுவும் இயற்கை சார்ந்ததுதான் என்று அழுத்தமாக முன்வைக்கிற படமாக, அதிக மதிப்பெண் பெறவைக்கிறோம் என்று மாணவர்களை அடைத்து வைத்து, அக்கிரமங்கள் செய்கிற நாமக்கல் போன்ற பகுதிகளில் செயல்படும் சிலவகைப் பள்ளிகளைத் துணிந்து அம்பலப்படுத்தி நல்ல சினிமாவில் இதுவும் சாத்தியமே என்று வியக்கவைத்திட்ட படமாக பலவகைகளிலும் தமிழ் சினிமாவை தரமுயர்த்தித் தலைநிமிர வைத்திருக்கிறது இந்த அப்பா. அடுத்த தலைமுறை உருப்படியாக உருவாக வேண்டுமே என்று ஆதங்கப்படுகிற சமுதாய அக்கறையுள்ள ஒவ்வொருவரும் தங்கள் அடுத்த தலைமுறை வாரிசுகளோடு அவசியம் பார்க்கவேண்டிய படம் இந்த அப்பா.

தமிழ் சினிமாவில் நல்ல சிந்தனைகளை விதைக்கும் முயற்சியில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்திவரும் சமுத்திரக்கனிக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், நன்றியும்..!




மற்றவை







ராஜகுரு பதில்கள்


தற்கொலைக்குத் தயாரா? - மதுக்கூர் இராமலிங்கம்


மதுரை மேல அனுப்பானடியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி லெனின் தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டிற்குச் சென்று அவரது தந்தையிடம் ஆறுதல் கூறியபோது, என் மகன் இனிமேல் திரும்பி வரப்போவதில்லை; ஆனால் என்  மகனுக்கு ஏற்பட்ட கதி இனி எந்தவொரு பட்டதாரிக்கும் ஏற்படக் கூடாது என்றார். அவர் தினக்கூலிக்கு வேலை செய்யும் ஒரு கட்டுமானத் தொழிலாளி.

லெனின் பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்று பொறியியல் படிப்பை முடித்துள்ளார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. தினந்தோறும் வேலைக்காக அலைந்திருக்கிறார். இந்த நேரத்தில்தான் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகளிடமிருந்து தினமும் தந்தைக்கும் மகனுக்கும் மாறி மாறி தொலைபேசி அழைப்பு, எஸ்எம்எஸ் செய்தி என்று நெருக்கடி அதிகமாகி உள்ளது. நாம் கடன் வாங்கியது ஸ்டேட் வங்கியில்தானே. ஆனால் நோட்டீஸ் அனுப்புவதும், மிரட்டுவதும் ரிலையன்ஸ் என்கிற நிறுவனம் அல்லவா என்ற புதிருக்கு அவர்களுக்கு விடை
தெரியவில்லை.

ஸ்டேட் வங்கி எனும் பொதுத்துறை நிறுவனம் தன்னிடம் மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை வசூலிக்கும் பொறுப்பை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஏலம் விட்டு விட்டது. அதனால்தான் கூலிப்படை போல அம்பானி நிறுவனம் மாணவர்களை மிரட்டி வருகிறது. இந்த தேசிய தேசபக்தப் பொருளாதாரம்  எல்லாம் அந்த எளிய கட்டுமானத் தொழிலாளி குடும்பத்திற்குத் தெரியவில்லை. இவ்வாறு 700  கோடி அளவிற்கு கல்விக்கடன் வசூலிக்கும் பொறுப்பை அம்பானி அடியாள் கும்பல் ஏற்றிருக்கிறது.

லெனின் ஸ்டேட் வங்கியிடம் பெற்ற தொகை ரூ. 1. 90 லட்சம். இதில் நயா பைசாவைக் கூட அவர் கண்ணால் பார்க்கவில்லை. மொத்தப் பணத்தையும் தனியார் பொறியியல் கல்லூரி  பெற்றுக் கொண்டது. ஆனால் வட்டியுடன் சேர்த்து 2லட்சத்து 48 ஆயிரத்து 623 ரூபாயைக் கட்ட வேண்டும் என்று கணக்குப் போட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கல்விக் கடனைத்  திருப்பிச் செலுத்த 7 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை கால அவகாசம் இருக்கும்போது இந்த ஏழை மாணவனை ஒரே தவணையில் திருப்பிச் செலுத்துமாறு ரிலையன்ஸ் நிறுவனம்  எப்படிக் கிடுக்கி போட்டது? இது லெனின் என்ற ஒரு மாணவருக்கு மட்டும் ஏற்பட்ட அனுபவம் அல்ல.

கோவையைச் சேர்ந்த ஒரு மாணவர் ரூ.90,000 ஆயிரம் கடன் பெற்று அது வட்டியோடு குட்டி
போட்டு 1லட்சத்து 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது. அதுபோல, மதுரையில் மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு  ரூ.65,000 வீதம் கடன் பெற வங்கி நிர்வாகம் ஒப்புக் கொண்டிருக்கிறது. ஐந்தாம் ஆண்டு தவணையைக் கேட்டு அவர் சென்றபோது, அவருக்கு வங்கி நிர்வாகம் கடன் தர மறுத்துவிட்டது. அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென்று தனியார் நிறுவனம் ஒன்று மிரட்டத் துவங்கியிருக்கிறது.

கல்விக் கடன் வழங்குவது ஏதோ மிகப்பெரிய சாதனை போல முந்தைய காங்கிரஸ் அரசும்,
இப்போதைய பாஜக அரசும் பீற்றிக் கொள்வது உண்டு. ஆனால் இது மாணவர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் மிகப்பெரிய கடன் வலையில் சிக்க வைக்கும் சதி என்பது அம்பலமாகி வருகிறது. வேலை கிடைக்காத வேதனை ஒருபுறம் என்றால், கடன் கேட்டு தரப்படும் நெருக்கடியால் பல குடும்பங்கள் நிலைகுலைந்து போவது பெரும் துயரம்.

ஸ்டேட் வங்கி தனக்கு வர வேண்டிய கடன் தொகையை ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஏலம் விட்டுள்ளது. ஆனால் இந்த அம்பானிகள்தான் நாட்டிலேயே மிகப் பெரிய கடன்காரர்கள். ரிலையன்ஸ் நிறுவனமே பல வங்கிகளுக்கு  ரூ. 1,25,000 கோடிக் கடன் பாக்கி வைத்துள்ளது. தான் கட்ட வேண்டிய கடனைக் கட்டாத இந்தக் கும்பல்தான் ஏழை, எளிய மாணவர்களின் கழுத்தில் துண்டைப் போட்டு முறுக்குகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் செலுத்த வேண்டிய கடன் பாக்கியை வசூலிக்க வேண்டிய பொறுப்பை நம்முடைய வங்கிகள் யாரிடம் ஒப்படைக்கப் போகின்றன?

இந்தியாவின் முதல் பத்து நிறுவனங்கள் வைத்துள்ள வங்கிக் கடன் மட்டும் ரூ. 5 லட்சம் கோடியை தாண்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. வாரச் சந்தையில் சிறுவியாபாரிகளிடம் கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை மிகப்பெரிய ரவுடிகளிடம் ஒப்படைப்பது போலத்தான், மாணவர்கள் மற்றும் சிறு விவசாயிகளிடம் கடன் வசூலிக்கும் பொறுப்பை அம்பானி போன்ற நிறுவனங்களிடம் ஒப்படைப்பதும்.  சிலை திருடும் கும்பலை கோவில் தர்மகர்த்தாவாக நியமிப்பது போலத்தான் இதுவும்.

விஜய் மல்லையா என்ற பலே கில்லாடி சாராய வியாபாரி பொதுத்துறை வங்கிகளிடம் ரூபாய் ஒன்பதாயிரம் கோடி அளவிற்கு கடன் வாங்கிவிட்டு, வெளிநாட்டிற்கு தப்பி ஓடிவிட்டார். அவர் லண்டனில் இருந்துகொண்டு இந்திய அரசுக்கு தெனாவட்டாக நிபந்தனை விதித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இங்கோ லெனின் என்ற எளிய பொறியியல் பட்டதாரி அவமானம் தாங்கமுடியாமல் தூக்கில் தொங்குகிறார். மல்லையா மீதான வழக்கில் ஆஜரான ஒரு வழக்கறிஞர் என்னுடைய கட்சிக்காரர் அப்பாவி மல்லையா ரூ. 9 ஆயிரம் கோடிதானே ஏப்பம் விட்டிருக்கிறார்.. ஆனால் ரூ. 1,25,000 கோடி வங்கிக்கடனை வாங்கிக் கட்டாமல் ஏப்பம் விட்ட அம்பானி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று கேட்டிருக்கிறார். வங்கியிடமிருந்து பதில் இல்லை. அம்பானி மீது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எப்படிக் கூறமுடியும்அதுதான் கல்விக்கடன் வசூலிக்கும் மகத்தான பணியை அவர்களிடம் கொடுத்துள்ளோமே என்று வங்கி நிர்வாகம் பதில் கூறியிருக்கலாம்.

லெனின் என்ற மாணவனை தூக்கில் தொங்கவிட்ட இதே ஸ்டேட் வங்கி நிர்வாகம்தான் அதானி என்ற மோடியின் ஆப்த நண்பருக்கு ஆஸ்திரேலியாவில் சுரங்கம் வாங்க பல லட்சம் கோடியைக் கடன் வழங்க ஒப்புக் கொண்டது. அவரும் ஏற்கனவே வாங்கிய வங்கிக் கடனைக் கட்டாமல் டிமிக்கி கொடுப்பவர்தான்.

உலகமயம் இந்தியாவுக்கு அபரிமிதமான வளர்ச்சியைக் கொண்டு வந்துவிட்டது என்று சிலர் வாய்கிழியப் பேசுகிறார்கள். இந்த கொள்கைதான் மாணவர்களைத் தூக்கில் தொங்கவிடுகிறது..
மல்லையாக்களைத் தப்ப விடுகிறது. அப்பாவிகளை மிரட்டுகிறது.. அம்பானிகளை வாழ  வைக்கிறது. இனிமேல் கல்விக்கடன் பத்திரத்தில் நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று மட்டும் குறிக்க வேண்டாம். தற்கொலைக்குத் தயாராக இருக்கவும் என்றும் சேர்த்து எழுதி வாங்கிக் கொள்ளலாம்.

(94422 02726 –mathukkur@gmail.com