Friday, August 5, 2016


ச.சீ.இராஜகோபாலன்

புதிய தேசியக் கல்விக் கொள்கை வகுக்க வழிகாட்ட அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. தேசிய கல்விக் கொள்கையா, தேசியக் கல்விக் கொள்கையா என்பது புரியாத அறிக்கையாகவுள்ளது. தேசியக் கல்வி என்பது தேசத்திற்குரிய தனித்தன்மைகள், சிறப்புகள், இலட்சியங்கள் ஆகியவற்றைப் போற்றவும் வளர்க்கவும் முதன்மைப்படுத்தும் கல்வி அமைப்பு. அரசியல் சட்டம் வகுத்துள்ளவற்றை நடைமுறைப்படுத்தும் அமைப்பு. கோத்தாரி கல்விக் குழு இவற்றை விரிவாக விளக்குகின்றது.

தேசிய கல்விக் கொள்கை என்பது நாட்டிற்குப் பொதுவான ஒரு கொள்கை. கல்வி எத்தகையது என்பது வரையறுக்கப்படாதது. அறிக்கையின் முகமன் நமது நாட் டின் பன்முகத் தன்மையினை அறியாதோ, மறைத்தோ உள்ளது தெளிவு. தென்னிந்தியா என்று ஒன்று இருப்பதே அறியாத இக்குழுவின் தலைவர் டிஆர்எஸ் சுப்பிரமணியன் ஒரு தமிழர் என்பது வேதனை. இந்தியாவின் மிகப் பழமையான கல்விமுறை வேதக் கல்வியே என்று முகமன் தொடங்குகின்றது

பல பெயர்கள் சுட்டப்பட்டுள்ளன. கல்வி, கல்லாமை என்று இரு அதிகாரங்களைக் கொண்ட திருக்குறளோ, திருவள்ளுவரோ கண்டு கொள்ளப்படவில்லை. நாளந்தாவைக் குறிப்பிடும்பொழுது காஞ்சியைப் பற்றி பதிவும் இல்லை. குருகுலக் கல்வியை உலகிற்கு நம் நாடு  அளித்த கொடையெனக் கூறும் முகமன்  பெரும்பான்மையோர்க்கு அம்முறையே கல்வியை மறுத்துள்ளது என்பதையும், தம் முயற்சியால் கற்ற ஏகலைவன்கள் கொடுத்த விலை பற்றியும் சொல்லாதது வியப்பில்லை.


அது போலவே கல்விப் பணியாற்றிய வட இந்தியர்கள் பலரது பெயர்களைக் குறிப்பிடும்பொழுது தென்னிந்தியர்கள் ஒருவர் பெயரும் குறிப்பிடப்படவில்லை. இது போல இந்தியாவின் பல பகுதிகள் பற்றி அறியாத இக்குழுவினரது அறிக்கை எவ்வாறு இருக்கும் என்று விவரிக்கத் தேவையில்லை. பெயரளவிற்கு ஒரு கல்வியாளரே குழு உறுப்பினர் ஆவார். ஆதாரங்கள் அடிப்படையிலேயே உயர்மட்டக் குழுக்கள் தம் கருத்துகளை முன்வைக்க வேண்டும். தேசிய கலைத் திட்டம் 2005-க்கு பேரா. யஷ்பால் கொடுத்துள்ள முன்னுரை படிப்போர்க்கு எழுச்சி ஊட்டும்.


0 comments:

Post a Comment

உங்கள் கருத்தினை பதிவிடுங்களேன்.